வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8


பாகம் 8

ஏப்ரல் 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக ஆலிவர் கௌட்ரிக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்கும்போது, தீர்க்கதரிசி சொல்லக்கேட்டு எழுதிக் கொண்டு, தொடர்ந்து எழுத்தராக பணியாற்றிய ஆலிவர், மொழிபெயர்க்கும் வரம் தரிப்பிக்கப்பட வாஞ்சித்தார். இந்த வெளிப்படுத்தலைக் கொடுத்து கர்த்தர் அவரது வேண்டுகோளுக்கு பதிலளித்தார்.

1–5, பரிசுத்த ஆவியின் வல்லமையால் வெளிப்படுத்தல் வருகிறது; 6–12, தேவ இரகசியங்களைப்பற்றிய அறிவும் பூர்வகாலத்து பதிவேடுகளை மொழிபெயர்க்கும் வல்லமையும் விசுவாசத்தால் வருகிறது.

1 ஆலிவர் கௌட்ரி, மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நிச்சயமாகவே உனது தேவனும் மீட்பருமாகிய கர்த்தர் ஜீவிக்கிறபடியாலே, பூர்வமானதும், எனது ஆவியின் வெளிப்பாட்டால் பேசப்பட்டதுமான எனது வேதத்தின் அந்த பகுதிகள் அடங்கியதுமான பூர்வகாலத்து, பழைய குறிப்பேடுகளில் பதிக்கப்பட்டவைகளைப்பற்றிய அறிவை நீ பெறுவாய் என்ற நம்பிக்கையில் விசுவாசத்திலும், உண்மையுள்ள இருதயத்தோடும் எந்தக் காரியங்களைக் குறித்து நீ கேட்டாலும் நிச்சயமாக நீ அந்த அறிவைப் பெறுவாய்.

2 ஆம், இதோ, உன்மேல் வரப்போகிறதும், உன் இருதயத்தில் தங்கப்போகிறதுமான பரிசுத்த ஆவியால் உன் மனதிலும் உன் இருதயத்திலும் நான் உனக்குக் கூறுவேன்.

3 இப்பொழுது, இதோ, இது ஆவியின் வெளிப்படுத்தல்; இஸ்ரவேல் ஜனங்களை, சிவந்த சமுத்திரத்தினூடாக உலர்ந்த தரையின்மேல் மோசே கடக்க வைத்த ஆவி இதுவே.

4 ஆகவே இது உன் வரம்; இதை பிரயோகப்படுத்து, நீ பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் இது எதிரிகளின் கைகளுக்கு உன்னை தப்புவிக்கும், இல்லையெனில் அவர்கள் உன்னைக் கொன்றுபோட்டு உனது உயிரை அழிவுக்குக் கொண்டுவந்திருப்பார்கள்.

5 இந்த வார்த்தைகளை நினைவுகூர், எனது கட்டளைகளைக் கைக்கொள். இது உனது வரமென்பதை நினைவுகூர்.

6 இப்பொழுது இதுவே உனது அனைத்து வரமும் அல்ல; ஏனெனில் ஆரோனின் வரமான மற்றொரு வரம் உனக்கிருக்கிறது; இதோ, அது உனக்கு அநேகக் காரியங்களைக் கூறியிருக்கிறது;

7 இதோ, ஆரோனின் வரம் உன்னோடிருக்க காரணமாயிருக்கிற, தேவனுடைய வல்லமையே அல்லாமல் வேறு எந்த வல்லமையுமில்லை,

8 ஆகவே, சந்தேகப்படாதே, ஏனெனில் இது தேவனின் வரம்; இதை உனது கரங்களில் வைத்திருந்து அதிசயமான காரியங்களைச் செய்வாய்; இது தேவனின் கிரியையாயிருப்பதால் எந்த வல்லமையாலும் அதை உன் கரங்களிலிருந்து எடுக்க முடியாது.

9 ஆகவே, அதன் மூலமாய் உனக்குக்கூற நீ எதைக் கேட்டாலும், நான் உனக்கு அருளுவேன், அதைப்பற்றிய அறிவை நீ பெறுவாய்.

10 விசுவாசமில்லாமல் உன்னால் எதையும் செய்யமுடியாதென்பதை நினைவுகூர்; ஆகவே விசுவாசத்தோடு கேள். இந்தக் காரியங்களை அற்பமாய் எண்ணாதே; நீ கேட்கக்கூடாத காரியங்களைக் குறித்துக் கேட்காதே.

11 மறைத்து வைக்கப்பட்டிருந்த, பரிசுத்தமான அந்த பூர்வகாலத்து அனைத்து பதிவேடுகளிலிருந்து மொழிபெயர்க்கவும், அறிவைப்பெறவும் தேவ இரகசியங்களை அறிந்துகொள்ள நீ கேட்கலாம். உன்னுடைய விசுவாசத்தின்படி அது உனக்குக் கொடுக்கப்படும்.

12 இதோ, இதை நானே பேசினேன்; நானே ஆரம்பத்திலிருந்தே இதை உன்னிடம் பேசினேன். ஆமென்.