வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23


பாகம் 23

ஏப்ரல் 1830ல் நியூயார்க்கின் மான்செஸ்டரில் ஆலிவர் கௌட்ரி, ஹைரம் ஸ்மித், சாமுவேல் ஹெச். ஸ்மித், ஜோசப் ஸ்மித் மூத்தவர், மற்றும் ஜோசப் நைட் மூத்தவருக்கு, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஐந்து வெளிப்படுத்தல்கள். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பேரின் கடமைகளைப்பற்றி அறிந்து கொள்வதற்கான சிரத்தையான வாஞ்சையின் விளைவாக தீர்க்கதரிசி கர்த்தரிடம் விண்ணப்பித்து ஒவ்வொருவருக்காவும் ஒரு வெளிப்படுத்தலைப் பெற்றார்.

1–7, இந்த ஆரம்பகால சீஷர்கள் பிரசங்கிக்கவும், புத்தி சொல்லவும், சபையைப் பெலப்படுத்தவும் அழைக்கப்பட்டார்கள்.

1 இதோ, ஆலிவர், உன்னிடம் நான் ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறேன். இதோ, நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், ஆக்கினையின் கீழ் இல்லை. ஆனால் பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிரு, இல்லையானால் நீ சோதனைக்குள்ளாக்கப்படுவாய்.

2 உனது அழைப்பை சபைக்கும், உலகத்துக்கும் தெரியப்படுத்து, இப்போதிலிருந்து என்றென்றைக்கும் சத்தியத்தைப் பிரசங்கிக்க உனது இருதயம் திறக்கப்படும். ஆமென்.

3 இதோ, ஹைரம் உன்னிடம் நான் ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறேன்; நீயும்கூட ஆக்கினையின் கீழ் இல்லை, உனது இருதயம் திறக்கப்பட்டும் உனது நாவு தளர்த்தப்பட்டும் இருக்கிறது; உனது அழைப்பு புத்தி சொல்லவும் தொடர்ந்து சபையைப் பெலப்படுத்தவுமே. ஆகவே உனது கடமை சபைக்காக என்றென்றைக்கும் உள்ளது, மேலும் இது உனது குடும்பத்தினிமித்தமே. ஆமென்.

4 இதோ, சாமுவேல் உன்னிடம் நான் ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறேன்; நீயும் கூட ஆக்கினையின் கீழ் இல்லை, உனது அழைப்பு புத்தி சொல்லவும், சபையைப் பெலப்படுத்தவுமே; இன்னமும் உலகத்திற்கு முன்பாக பிரசங்கிக்க நீ அழைக்கப்படவில்லை. ஆமென்.

5 இதோ, ஜோசப் உன்னிடம் நான் ஒருசில வார்த்தைகளைப் பேசுகிறேன்; நீயும் கூட ஆக்கினையின் கீழ் இல்லை, உனது அழைப்பும் புத்தி சொல்லவும் சபையைப் பெலப்படுத்துவதுமே; இது இப்போதிலிருந்து என்றென்றைக்கும் உனது கடமையாயிருக்கிறது. ஆமென்.

6 இதோ, ஜோசப் நைட், உனது சிலுவையை நீ எடுத்துக்கொண்டு, உலகத்திற்கு முன்பாக, நீ சத்தமாகவும் இரகசியமாகவும், உனது குடும்பத்திலும், உனது நண்பர்கள் மத்தியிலும், எல்லா இடங்களிலும் ஜெபிக்க வேண்டுமென இந்த வார்த்தைகளால் நான் உனக்கு தெரிவிக்கிறேன்.

7 இதோ, மெய்யான சபையுடன் இணைப்பது உனது கடமை, வேலைக்காரனின் பலனை நீ பெறும்படியாக, தொடர்ந்து புத்தி சொல்ல உனது வார்த்தையைக் கொடு. ஆமென்.