வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 71


பாகம் 71

டிசம்பர் 1, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் பெறப்படும்வரை சிட்னி ரிக்டன் தீர்க்கதரிசியின் எழுத்தராக இருந்து, அவர் வேதாகமத்தை தொடர்ந்து மொழிபெயர்த்தார், அப்போது கொடுக்கப்பட்ட அறிவுரையை அவர்கள் நிறைவேற்றும்படியாக இந்த சமயத்தில் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மதமாறுபாட்டில் ஈடுபட்ட எஸ்றா பூத்தால் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியிடப்பட்டதன் விளைவாக சபைக்கு விரோதமாக எழுந்த பகைமையின் உணர்வுகளை அமைதிப்படுத்த சகோதரர்கள் போய் பிரசங்கிக்க வேண்டியதாயிற்று

1–4, சுவிசேஷத்தை அறிவிக்க ஜோசப் ஸ்மித்தும், சிட்னி ரிக்டனும் அனுப்பப்பட்டார்கள்; 5–11, பரிசுத்தவான்களின் சத்துருக்கள் தாறுமாறாக்கப்படுவார்கள்.

1 இதோ, என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித், இளையவன், சிட்னி ரிக்டன், இப்படியாக கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், என்னுடைய சித்தத்தின்படியும் உங்களுக்குக் கொடுக்கப்படவிருக்கிற ஆவியின் பகுதி, மற்றும் வல்லமையின்படியும், வேதங்களிலிருந்து அதன் இரகசியங்களை விவரித்துக்கொண்டு, சுவிசேஷத்தையும், ராஜ்யத்தின் காரியங்களையும், அறிவிப்பதில் நீங்கள் உங்கள் வாய்களைத் திறக்கவேண்டுமென்பது எனக்கு தேவையாகவும் அவசியமாகவுமிருக்கிற நேரம் மெய்யாகவே வந்திருக்கிறது.

2 மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கொஞ்ச காலத்திற்கு, உங்களுக்கு அறியப்படுத்தப்படும்வரையிலும், சுற்றிலுமுள்ள பகுதிகளிலும், சபையிலும்கூட உலகத்தாருக்கு அறிவியுங்கள்.

3 மெய்யாகவே, நான் உங்களுக்குக் கொடுக்கிற கொஞ்ச காலத்துக்கான ஊழியம் இதுவே.

4 ஆகவே, என்னுடைய திராட்சைத்தோட்டத்திலே நீங்கள் பிரயாசப்படுங்கள். பூமியின் குடிகளை அழையுங்கள், சாட்சி கொடுங்கள், கட்டளைகளுக்கும் வரப்போகிற வெளிப்படுத்தல்களுக்கும் வழியை ஆயத்தப்படுத்துங்கள்.

5 இப்பொழுது, இதோ, இதுதான் ஞானம்; வாசிக்கிறவன் புரிந்துகொண்டு, பெற்றுக் கொள்வானாக;

6 ஏனெனில் பெற்றுக்கொள்கிறவனுக்கு அது, மிக தாராளமாக கொடுக்கப்படும், அதிகாரமும் கூட.

7 ஆகவே, உங்கள் சத்துருக்களை தாறுமாறாக்குங்கள்; பகிரங்கமாகவும் தனியாகவும் உங்களை சந்திக்க அவர்களை அழையுங்கள்; நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற அளவில் அவர்களுடைய அவமானம் வெளிப்படுத்தப்படும்.

8 ஆகவே, கர்த்தருக்கு விரோதமான தங்களுடைய பெலத்த காரணங்களை அவர்கள் கொண்டுவருவார்களாக.

9 மெய்யாகவே இப்படியாக கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்;

10 உங்களுக்கு விரோதமாக எந்த மனுஷனும் அவனுடைய குரலை உயர்த்தினால், என்னுடைய ஏற்ற காலத்தில் அவன் தாறுமாறாக்கப்படுவான்.

11 ஆகவே, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். அவைகள் மெய்யானவையும் உண்மையுள்ளவைகளுமாய் இருக்கின்றன, அப்படியே ஆகக்கடவது. ஆமென்.