வேதங்கள்
ஆல்மா 3


அதிகாரம் 3

அம்லிசியர் தீர்க்கதரிசன வார்த்தைக்கேற்ப தங்கள் மீது அடையாளமிடுதல் – லாமானியர் தங்களுடைய கலகத்தினிமித்தம் சபிக்கப்படுதல் – மனுஷர் தங்களுடைய சாபங்களைத் தங்கள்மீது வருவித்தல் – நேபியர் மற்றுமொரு லாமானிய சேனையை முறியடித்தல். ஏறக்குறைய கி.மு. 87–86.

1 அந்தப்படியே, போர்க்கருவிகளால் மாய்க்கப்படாத நேபியர்கள் கொலையுண்டவர்களை அடக்கம்பண்ணின பின்பு, தங்கள் தேசங்களுக்கும், தங்கள் வீடுகளுக்கும், தங்கள் மனைவிகளிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் திரும்பினார்கள், அதிகமானோர் மாய்ந்துபோனபடியாலே அவர்களை எண்ணக்கூடாமற்போயிற்று.

2 அநேக ஸ்திரீகளும், பிள்ளைகளும், பட்டயத்தினாலே கொலையுண்டார்கள். அவர்களுடைய ஆடுகளும் மந்தைகளும் பட்டயத்தினாலே கொல்லப்பட்டன; மனுஷ சேனையால் மிதிபட்டு, அவர்களுடைய வயல்களின் மிகுதியான தானியங்கள் அழிக்கப்பட்டன.

3 சீதோன் நதிக்கரையண்டையிலே கொலையுண்ட லாமானியரும் அம்லிசியரும் சீதோன் தண்ணீர்களிலே எறியப்பட்டார்கள்; இதோ அவர்களுடைய ஏராளமான எலும்புகள் சமுத்திரத்தின் ஆழங்களிலே கிடக்கின்றன.

4 லாமானியரைப்போலவே தங்கள் நெற்றியிலே சிவப்பு வர்ணத்தால் அடையாளமிட்டதால் அம்லிசியர் நேபியரிடமிருந்து வேறுபடுத்தப்பட்டனர். ஆனாலும் அவர்கள் லாமானியர்களைப்போல தலைமயிரை சவரம்பண்ணிக் கொள்ளவில்லை.

5 லாமனியரின் தலைகளோ மொட்டையடிக்கப்பட்டிருந்தன, தங்கள் இடைக்கச்சைக்கு தோலையும், அரையைச் சுற்றி தங்கள் கவசத்தையும், வில்லையும் அம்புகளையும், கற்களையும் கவண்களையும், அவைகளைப் போன்றவைகளையும் தரித்திருந்ததைத் தவிர நிர்வாணிகளாயிருந்தனர்.

6 லாமானியருடைய தகப்பன்மார்கள், நீதிபரரும், பரிசுத்த மனுஷருமான தங்கள் சகோதரர்களாகிய நேபி, யாக்கோபு, யோசேப்பு, சாமிற்கு விரோதமாய் மீறி கலகம் செய்ததாலே, அவர்களின் தகப்பன்மார்களின் மீது வைக்கப்பட்ட அடையாளத்தின்படி அவர்கள் மீது வந்த சாபத்தீட்டினால் இவர்களின் சருமமும் கருமையாயிருந்தது.

7 அவர்களுடைய சகோதரர் அவர்களை அழிக்க வகைதேடியதாலே அவர்கள் சபிக்கப்பட்டார்கள், இதினிமித்தம் தேவனாகிய கர்த்தர், ஆம், லாமான், லெமுவேல் மீதும், இஸ்மவேலின் குமாரரின் மீதும், இஸ்மவேலரின் ஸ்திரீகள்மீதும் அடையாளத்தை ஏற்படுத்தினார்.

8 அவர்களுடைய சந்ததி, அவர்களின் சகோதரரின் சந்ததியிடமிருந்து வேறுபட்டிருக்கவும், இதினிமித்தம் அவர்கள் கலந்து விடாமலும், தங்களுடைய அழிவை உறுதி செய்யக்கூடிய, தவறான பாரம்பரியங்களிலே நம்பிக்கை வைக்காமலும், தேவனாகிய கர்த்தர் தன் ஜனத்தை காத்துக்கொள்ளும்படியாக இப்படிச் செய்யப்பட்டது.

9 அந்தப்படியே, லாமானிய சந்ததியோடு தன் சந்ததியைக் கலப்பவன் எவனும் அதே சாபத்தை தன் சந்ததியின்மீதும் வரவழைத்துக்கொண்டான்.

10 லாமானியராலே வழிநடத்தப்பட தன் இஷ்டமாய் போகிறவன் எவனும் அதே நாமத்தினாலே அழைக்கப்படுவான். ஒரு அடையாளம் அவன் மீது வைக்கப்பட்டது.

11 அந்தப்படியே, லாமானியரின் பாரம்பரியத்திலே விசுவாசியாமல், தேவனுடைய கட்டளைகளை விசுவாசித்து, அவைகளைக் கைக்கொண்ட, தங்கள் பிதாக்களுடைய சரியான பாரம்பரியத்திலும், எருசலேம் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பதிவேடுகளிலும் விசுவாசித்தவர்கள், அந்நாள் முதற்கொண்டு நேபியர் அல்லது நேபியின் ஜனமென்று அழைக்கப்பட்டார்கள்.

12 அப்படிப்பட்டவர்களே தங்கள் ஜனங்களைக் குறித்தும், லாமானிய ஜனங்களைக் குறித்த உண்மைகளையும் கொண்ட பதிவேடுகளை வைத்திருந்தார்கள்.

13 இப்பொழுது நாம் அம்லிசியரைக் குறித்துப் பார்ப்போம். அவர்களும் தங்கள் மீது ஒரு அடையாளம் இட்டுக்கொண்டார்கள்; ஆம் நெற்றியிலே சிவப்பு அடையாளத்தை தங்கள்மீது நெற்றியிலே அடையாளமாக வைத்துக்கொண்டார்கள்.

14 இப்படியாக, கர்த்தருடைய வார்த்தை நிறைவேறியது. அவர் நேபியோடே சொன்ன வார்த்தைகள் இவைகளே: இதோ, லாமானியரை சபித்தேன். தங்கள் துன்மார்க்கத்திலிருந்து அவர்கள் மனந்திரும்பி, அவர்கள் மீது நான் மனமிரங்கும் பொருட்டாக, என்னிடத்தில் திரும்பினாலொழிய இந்நாள் முதற்கொண்டு என்றென்றைக்குமாய் உன்னிலும், உன் சந்ததியிலுமிருந்து அவர்கள் சந்ததியும் விலகியிருக்க அவர்கள்மீது ஓர் அடையாளம் இடுவேன்.

15 பின்னும் உன் சகோதரருடன் தன் சந்ததியை கலப்பவனும், சபிக்கப்பட்டிருக்கும் பொருட்டு, அவன் மீதும் ஓர் அடையாளம் இடுவேன்.

16 பின்னும் உன்னோடும் உன் சந்ததியோடும் சண்டையிடுகிறவர்களின் மீதும் ஓர் அடையாளம் இடுவேன்.

17 உன்னிடத்திலிருந்து விலகிப்போகிறவன் உன் சந்ததியான் என்று அழைக்கப்படுவதில்லை; நான் உன்னையும், உன் சந்ததியார் என்று அழைக்கப்படுகிற யாவரையும், இந்நாள் முதற்கொண்டு என்றென்றைக்குமாய் ஆசீர்வதிப்பேன்; நேபிக்கும் அவனுடைய சந்ததிக்கும் கர்த்தரால் உண்டான வாக்குத்தத்தங்கள் இவைகளே.

18 அம்லிசியர் தங்கள் நெற்றிகளில் அடையாளம் இடத்தொடங்கியபோது, தாங்கள் தேவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றுகிறோம் என்று அறியாதிருந்தார்கள்; ஆகிலும் அவர்கள் தேவனுக்கு எதிராக வெளியரங்கமாய் கலகம் செய்தார்கள்; எனவே சாபம் அவர்கள்மீது வருவது அவசியமாயிற்று.

19 அவர்கள் சாபத்தை தங்கள்மீது வரவழைத்துக்கொண்டதை நீங்கள் காணவேண்டுமென மனதாயிருக்கிறேன்; அப்படியே சபிக்கப்பட்டவன் எவனும், தன் மீது தானே ஆக்கினைத் தீர்ப்பை வரவழைத்துக் கொள்கிறான்.

20 இப்பொழுது, அந்தப்படியே, அம்லிசியரும், லாமானியரும், சாரகெம்லா, தேசத்திலே சண்டையிட்ட சில நாட்களுக்குள்ளாகவே, முதற் சேனை அம்லிசியரை சந்தித்த அதே இடத்தில், லாமானியரின் மற்றுமொரு சேனை, நேபியின் ஜனங்கள் மீது போர் தொடுத்தது.

21 அந்தப்படியே, அவர்களைத் தங்கள் தேசத்திலிருந்து துரத்த ஒரு சேனை அனுப்பப்பட்டது.

22 ஆல்மா காயத்தால் உபத்திரவப்பட்டுக் கொண்டிருந்தமையாலே, இவ்விசை லாமானியருக்கு விரோதமாய் நடந்த யுத்தத்திற்கு அவன் போகவில்லை;

23 எனினும் அவர்களுக்கு விரோதமாய் எண்ணிறைந்த சேனையை அனுப்பினான்; அவர்கள் போய், லாமானியரில் அநேகரைக் கொன்றுபோட்டு, மீதியானோரை தங்கள் தேசத்து எல்லைகளை விட்டுத் துரத்தினார்கள்.

24 அவர்கள் திரும்பிவந்து தேசத்திலே சமாதானத்தை நிலைவரப்பண்ணினார்கள், கொஞ்சகாலமளவும் தங்கள் சத்துருக்களால் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தார்கள்.

25 இந்த யுத்தங்கள், தர்க்கங்கள் யாவும் நியாயாதிபதிகளின் ஐந்தாம் வருஷ ஆளுகையிலே துவங்கி முடிவும் பெற்றன.

26 ஒரு வருஷத்திலே ஆயிரம் பதினாயிரக்கணக்கான ஆத்துமாக்கள், தங்களுடைய நன்மையான அல்லது தீமையான கிரியைகளுக்குத் தக்கதாக பலன்களை அறுக்கும்படிக்கு, தாங்கள் தெரிந்துகொண்ட நல்ல ஆவிக்கோ அல்லது தீய ஆவிக்கோ கீழ்ப்படிய, நித்திய மகிழ்ச்சியையோ அல்லது நித்திய துர்பாக்கியத்தையோ பெறும்படிக்கு, அவர்கள் நித்திய உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.

27 ஒவ்வொருவனும், தான் கீழ்ப்படிய தெரிந்துகொண்டவனின் கூலியைப் பெற்றுக்கொள்ளுகிறான். இது தீர்க்கதரிசன ஆவியால் உண்டான வார்த்தையின் படியே; ஆகவே அது சத்தியத்திற்கேற்றபடியே ஆகக்கடவது. இப்படியாய் நியாயாதிபதிகளின் ஆளுகையினுடைய ஐந்தாம் வருஷமும் நிறைவுற்றது.