வேதங்கள்
2 நேபி 20


அதிகாரம் 20

அசீரியாவின் அழிவு, இரண்டாம் வருகையின்போது துன்மார்க்கரின் அழிவுக்கு ஒப்பனையாய் இருக்கிறது – கர்த்தர் திரும்பவும் வந்த பின்பு, சில ஜனம் விட்டு வைக்கப்படும் – அந்நாளிலே யாக்கோபின் மீதியானவர்கள் திரும்புவார்கள் – ஏசாயா 10ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தின் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

2 அநியாயமான தாக்கீதுகளை கட்டளையிடுகிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும், ஐயோ!

3 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும், நீங்கள் என்ன செய்வீர்கள்? சகாயத்தை நாடி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைப்பீர்கள்?

4 நான் இல்லாமல், அவர்கள் கட்டுண்டவர்களின் கீழ் முடங்கி, கொலை செய்யப்பட்டவர்களின் கீழ் விழுவார்கள். இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

5 என் கோபத்தின் கோலாகிய அசீரியனே, அவர்கள் கையிலிருக்கிற தடி, அவர்களின் சினம்.

6 அவபக்தியான தேசங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, என் கோபத்திற்குள்ளான ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அவர்களை வீதிகளின் சேற்றைப்போல மிதித்துப்போடவும், அவனுக்கு கட்டளை கொடுப்பேன்.

7 அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை. அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை, கொஞ்சமல்ல, அநேக தேசங்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.

8 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

9 கல்னோ பட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத், அர்பாத்தைப் போலானதில்லையோ? சமாரியா, தமஸ்குவைப் போலானதில்லையோ?

10 என் புயம் விக்கிரகங்களின் ராஜ்யங்களை உண்டாக்க, அதன் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ளவைகளையும் மிஞ்சுவதாயிருந்தது.

11 நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல, எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ, என்று சொல்லுகிறான்.

12 ஆதலால் கர்த்தர் சீயோன் மலையிலும், எருசலேமிலும், தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான இருதயத்தின் பலனையும், அவன் மேட்டிமையான பார்வைகளின் மகிமையையும், நான் தண்டிப்பேன்.

13 அதற்கு அவன், என் கையின் பெலத்தினாலும் என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன், நான் புத்திமான். நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் ஐஸ்வரியங்களைக் கொள்ளையிட்டு, வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.

14 ஒரு குருவிக்கூண்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டு பிடித்து, விட்டுப்போன முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன். ஒருவனும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை எட்டிப்பார்த்ததுமில்லை என்று சொல்லுகிறான்.

15 கோடரியானது, தன்னைக்கொண்டு வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய் பெருமை பாராட்டலாமோ? தடியானது தன்னை எடுக்கிறவர்களுக்கு விரோதமாய் அசைவது போலவும், அது மரக்கட்டையல்லவென்று கோலானது எழும்பினாற் போலவும் இருக்குமே!

16 ஆகையால் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே, இளைப்பை அனுப்புவார், பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின் கீழ் கொளுத்துவார்.

17 இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

18 அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர் நிலத்தின் மகிமையையும், ஆத்துமாவிலும், சரீரத்திலும், அழியப்பண்ணுவார். அவர்கள், கொடிபிடிப்பவன் மயங்குவதைப்போல இருப்பார்கள்.

19 அவன் காட்டின் மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும். ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.

20 அந்நாளிலே, இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரை உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

21 மீதியாயிருப்பவர்கள், ஆம் யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.

22 உன் ஜனமாகிய இஸ்ரவேல், சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள். தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.

23 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர், தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.

24 ஆகையால் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர், சீயோனில் வாசமாயிருக்கிற ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே, அவன் உன்னை தடியால் அடித்து, எகிப்தியரைப்போல தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

25 இன்னும் கொஞ்ச காலத்துக்கு, என் உக்கிரம் அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால், என் கோபமும் தீர்ந்துபோம், என்று சொல்லுகிறார்.

26 ஓரேப் கன்மலையண்டையிலே மீதியான் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர், அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலை சமுத்திரத்தின் மேல் ஓங்கினதுபோல், அதை அவன் மேல் ஓங்குவார்.

27 அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும் உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும், அபிஷேகத்தினிமித்தம் நுகம் முறிந்துபோம்.

28 அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாஷிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.

29 கணவாயைத் தாண்டி, அவர்கள் கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள். ராமாத் திகைத்துப்போகிறது. சவுலின் கிபியா ஓடிப்போயிற்று.

30 காலீம் குமாரத்தியே உரத்த சத்தமாய்க் கூப்பிடு. ஒடுக்கப்பட்ட ஆனதோத்தே, அதை லாயீஷூக்குக் கேட்கும்படியாய்ச் செய்.

31 மத்மேனா நீக்கப்பட்டது. கேபிமின் குடிகள் தப்பி ஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.

32 ஆனாலும் அந்நாளிலே அவன் நோபிலே தங்கி, எருசலேமின் மேடாகிய சீயோன் குமாரத்தியின் பர்வதத்திற்கு விரோதமாய் தன் கையைக் குலுக்குவான்.

33 இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர், கிளைகளை பயங்கரமாய் வெட்டுவார், அமைப்பில் ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு, மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

34 அவர் காடுகளின் அடர்த்தியை இரும்பினாலே வெட்டிப்போடுவார், வல்லவராலே, லீபனோன் விழுந்துபோம்.