வேதங்கள்
1 நேபி 12


அதிகாரம் 12

வாக்குத்தத்தத்தின் தேசத்தை நேபி தரிசனத்திலே காணுதல்; அதில் வாசம் செய்வோரின் நீதியும், அக்கிரமும், வீழ்ச்சியும்; அவர்கள் மத்தியில் தேவ ஆட்டுக்குட்டியானவர் வருதல்; பன்னிரண்டு சீஷர்களும், அப்போஸ்தலரும் எவ்வாறு இஸ்ரவேலை நியாயந்தீர்ப்பார்கள்; அவிசுவாசத்தில் நலிந்தவர்களின் அருக்களிப்பும், அசுசியுமுள்ள நிலை. ஏறக்குறைய கி.மு. 600–592.

1 தூதன் என்னை நோக்கி: உன் சந்ததியையும், உன் சகோதரரின் சந்ததியையும் பார், என்றான். நான் வாக்குத்தத்தத்தின் தேசத்தைப் பார்த்தேன்; ஆம், எண்ணிக்கையிலே சமுத்திரத்தின் மணலத்தனையாய் உள்ள திரளான ஜனங்களைக் கண்டேன்.

2 அந்த திரளானோர் ஒருவருக்கொருவர் விரோதமாய் யுத்தம் செய்ய ஒன்றாகக் கூடியிருப்பதையும் நான் கண்டேன், நான் யுத்தங்களையும், யுத்தங்களின் வதந்திகளையும், என் ஜனத்தின் மத்தியில் அநேகர் பட்டயத்தால் கொலை செய்யப்படுவதையும், கண்டேன்.

3 தேசத்திலே யுத்தத்தினாலும் பிணக்குகளினாலும் அநேக தலைமுறைகள் கடந்து போவதைக் கண்டேன்; ஆம், நான் என்னால் கணக்கிடமுடியாத பல பட்டணங்களைக் கண்டேன்.

4 வாக்குத்தத்தத்தின் தேசத்தின் மேற்பரப்பில் ஒரு இருண்ட மூடுபனியை நான் கண்டேன்; மின்னல்களைக் கண்டேன், நான் இடிமுழக்கங்களையும், பூமியதிர்ச்சிகளையும், எல்லாவிதமான இரைச்சல்களையும் கேட்டேன்; பூமியும் பாறைகளும் வெடிப்பதைக் கண்டேன்; மலைகள் துகள்களாய் உருண்டு போவதையும் கண்டேன்; பூமியின் சமவெளிகள் பிளப்பதையும் கண்டேன்; மேலும் அநேக பட்டணங்கள் மூழ்கடிக்கப்படுவதையும் நான் கண்டேன்; பல நெருப்பால் எரிக்கப்படுவதையும் கண்டேன்; பூமியின் நடுக்கத்தால் பலர் உருளுவதையும் கண்டேன்.

5 இந்தக் காரியங்களை நான் பார்த்தபின்பு, இருண்ட புகை பூமியின் பரப்பின் மேலிருந்து கடப்பதைக் கண்டேன்; இதோ, கர்த்தரின் பெரிதும், பயங்கரமுமான நியாயத்தீர்ப்புகளால் விழுந்துபோகாத திரளானோரையும் கண்டேன்.

6 நான் வானங்கள் திறப்பதையும், பரலோகத்திலிருந்து தேவ ஆட்டுக்குட்டி இறங்குவதையும் கண்டேன்; மேலும் அவர் கீழே இறங்கிவந்து தம்மை அவர்களுக்குக் காண்பித்தார்.

7 பிற பன்னிரண்டு பேரின் மீதும் பரிசுத்த ஆவியானவர் இறங்குவதை நான் கண்டதை சாட்சி பகருகிறேன்; மேலும் அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டார்கள்.

8 அந்த தூதன் என்னிடம்: இதோ, உன்னுடைய சந்ததிக்கு ஊழியம் செய்யத் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு சீஷர்கள் என்றான்.

9 அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலரை நினைவில் வைத்திருக்கிறாயா? இதோ, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரையும் நியாயந்தீர்ப்பவர்கள் இவர்களே என்றான்; நீங்கள் இஸ்ரவேலின் வீட்டாராய் இருப்பதால், உனது சந்ததியின் பன்னிரண்டு ஊழியக்காரர்கள் இவர்களால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

10 நீ காண்கிற இந்தப் பன்னிரண்டு ஊழியக்காரர்கள் உன்னுடைய சந்ததியை நியாயந்தீர்ப்பார்கள். இதோ, அவர்கள் என்றென்றும் நீதிமான்களாயிருப்பார்கள்; ஏனெனில் தேவ ஆட்டுக்குட்டியானவரில் அவர்களின் விசுவாசத்தினிமித்தம் அவர்களின் வஸ்திரங்கள், அவரின் இரத்தத்தால் வெண்மையாக்கப்படுகின்றன என்றான்.

11 தூதன் என்னை நோக்கி: பார்! என்றான். நான் பார்த்து மூன்று தலைமுறைகள் நீதியிலே கடந்து சென்றதைக் கண்டேன்; அவர்களின் வஸ்திரங்கள் தேவ ஆட்டுக்குட்டியானவரைப் போலவே வெண்மையாயிருந்தன. மேலும் தூதன் என்னை நோக்கி: அவரில் அவர்களின் விசுவாசத்தினிமித்தம், அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் வெண்மையாக்கப்பட்டார்கள் என்றான்.

12 நேபியாகிய நான், நான்காவது தலைமுறையில் அநேகர் நீதியிலே கடந்து செல்வதைக் கண்டேன்.

13 பூமியிலுள்ள திரளானோர் ஒன்றாகக் கூடுவதை நான் கண்டேன்.

14 தூதன் என்னை நோக்கி: இதோ உன் சந்ததியையும், உன்னுடைய சகோதரரின் சந்ததியையும் பார் என்றான்.

15 நான் என் சந்ததியின் ஜனங்கள், என் சகோதரர்களின் சந்ததியை எதிர்த்து, திரளாய் ஒன்றாகக் கூடியிருப்பதையும் கண்டேன், அவர்கள் போரிடுவதற்காக, ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

16 தூதன் என்னிடம்: உன் தகப்பன் சொன்ன நதியான, ஆம், அவன் கண்ட அசுசியான தண்ணீருள்ள நீரூற்றைப் பார்; அதன் ஆழங்களோ, நரகத்தின் ஆழங்கள் என்றான்.

17 அந்த இருண்ட மூடுபனி மனுபுத்திரரின் கண்களைக் குருடாக்கி, இருதயங்களைக் கடினமாக்கி, அவர்கள் அழியவும், வழிதப்பிபோகவும், அகலப் பாதைகளிலே போகச் செய்யும் பிசாசின் சோதனைகளாகும்.

18 உன் தகப்பன் கண்ட அந்தப் பெரிய, விசாலமான கட்டிடம் மனுபுத்திரரின் வீணான கட்டளைகளும், கர்வமுமாயிருக்கிறது. உலக ஆரம்ப முதல், இக்காலம்வரைக்கும், இக்காலமுதல் என்றென்றுமாய், ஆம், நித்திய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் தாமே சாட்சி பகர்கிற, மேசியாவான, தேவ ஆட்டுக்குட்டியானவரின், நீதியின் வார்த்தையாகிய, ஒரு பெரிய பயங்கரமான, பெரும் பிளப்பு அவர்களைப் பிரிக்கும்.

19 தூதன் இந்த வார்த்தைகளைப் பேசியபோது, தூதனின் வார்த்தையின்படியே என் சகோதரரின் சந்ததி, என் சந்ததியை எதிர்த்துப் போராடுவதைக் கண்டேன்; என் சந்ததியின் கர்வத்தாலும், பிசாசின் சோதனைகளாலும் என் சகோதரரின் சந்ததியார் என் சந்ததியை மேற்கொள்வதைக் கண்டேன்.

20 நான் பார்த்தபொழுது என் சகோதரரின் சந்ததியின் ஜனங்கள் என் சந்ததியை மேற்கொள்வதைக் கண்டேன்; அவர்கள் பூமியின் மேற்பரப்பின் மீது திரளாகச் சென்றனர்.

21 அவர்கள் திரளாய் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன்; மேலும் நான் அவர்கள் மத்தியில் யுத்தங்களையும், யுத்த வதந்திகளையும் கண்டேன்; யுத்தங்களிலும், யுத்த வதந்திகளிலும் பல தலைமுறைகள் கடந்து செல்வதைக் கண்டேன்.

22 தூதன் என்னை நோக்கி: இதோ, இவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிவார்கள் என்றான்.

23 அவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்த பின்பு அவர்கள் கருமை மற்றும் அருக்களிப்புள்ளவர்களாகவும், எல்லாவிதமான அருவருப்பானவைகளையும் முழுச்சோம்பலையும் கொண்ட, ஒரு அசுசியான ஜனமாக மாறினார்கள் எனக் கண்டேன்.