வேதங்கள்
மோசே 3


அதிகாரம் 3

(ஜூன் – அக்டோபர் 1830)

பூமியின்மேல் அவைகள் இயற்கையாக இருந்ததற்கு முன்பாக சகல காரியங்களையும் தேவன் ஆவியிலே சிருஷ்டித்தார் – பூமியின்மேல் முதல் மாம்சமான மனுஷனை அவர் சிருஷ்டித்தார் – ஸ்திரீ மனுஷனுக்கு ஏற்ற துணை.

1 இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.

2 தேவனாகிய நான் செய்த என்னுடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, நான் உண்டாக்கின என்னுடைய சகல கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தேன், நான் செய்த சகல காரியங்களும் முடிக்கப்பட்டு அவைகள் நல்லதென்று தேவனாகிய நான் கண்டேன்.

3 தேவனாகிய நான் சிருஷ்டித்து உண்டுபண்ணின என்னுடைய சகல கிரியைகளையும் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவனாகிய நான் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினேன்.

4 இப்பொழுது இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், தேவனாகிய கர்த்தராகிய நான் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே,

5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும், பூமியின்மேல் முளைக்கும் முன்னால் நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் முளைக்கும் முன்னால், அவைகள் பூமி முழுவதன்மேல் இயற்கையாக இருந்ததற்கு முன்பாகவே, தேவனாகிய கர்த்தராகிய நான், நான் பேசிய சகல காரியங்களையும் ஆவியிலே சிருஷ்டித்தேன். ஏனெனில் தேவனாகிய கர்த்தராகிய நான் பூமி முழுவதின் மேல் இன்னமும் மழையைப் பெய்யப் பண்ணவில்லை. தேவனாகிய கர்த்தராகிய நான் சகல மனுபுத்திரர்களையும் சிருஷ்டித்தேன், இன்னும் நிலத்தைப் பண்படுத்த மனுஷன் இல்லை. ஏனெனில் அவர்களை நான் பரலோகத்தில் சிருஷ்டித்தேன், பூமியின்மேலோ, தண்ணீரிலோ, காற்றிலோ இன்னமும் மாம்சம் இருக்கவில்லை

6 ஆனால் தேவனாகிய கர்த்தராகிய நான் பேசினேன், அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

7 தேவனாகிய கர்த்தராகிய நான், மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினேன், மனுஷன் ஜீவாத்துமாவானான், பூமியின் முதல் மாம்சமானான், முதல் மனுஷனுமானான், ஆயினும் யாவும் முன்பே சிருஷ்டிக்கப்பட்டன, ஆனால் அவைகள் ஆவிக்குரியவிதமாய் சிருஷ்டிக்கப்பட்டு, என்னுடைய வார்த்தையின்படி உண்டாக்கப்பட்டன.

8 தேவனாகிய கர்த்தராகிய நான் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, நான் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தேன்.

9 தேவனாகிய கர்த்தராகிய நான் இயற்கையாக பார்வைக்கு அழகுள்ளதும் மனுஷன் அதைப் பார்க்க முடிகிறதுமான சகல விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினேன். அது ஒரு ஜீவாத்துமாவாகவும் மாறியது. ஏனெனில் அதை நான் சிருஷ்டித்த நாளில் அது ஆவிக்குரியதாயிருந்தது, ஏனெனில் தேவனாகிய கர்த்தராகிய நான் அதை சிருஷ்டித்த நோக்கத்தில், ஆம், மனுஷனுக்கு தேவையாயிருக்க நான் ஆயத்தப்படுத்திய சகல காரியங்களும் நிலைத்திருக்கிறது; அது புசிப்புக்கு நல்லதென மனுஷன் கண்டான். தேவனாகிய கர்த்தராகிய நான் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் நட்டு வைத்தேன்.

10 தோட்டத்துக்கு தண்ணீர் பாயும்படி, தேவனாகிய கர்த்தராகிய நான் ஏதேனிலிருந்து ஒரு நதியை ஓட வைத்தேன்; அது அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

11 முதலாம் ஆற்றுக்கு பைசோன் என தேவனாகிய கர்த்தராகிய நான் பேரிட்டேன், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது, அங்கே தேவனாகிய கர்த்தராகிய நான் அதிக பொன்னை விளைவித்தேன்;

12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது, அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.

13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பெயர்; அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது.

14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர்; அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடுகிறது. நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

15 தேவனாகிய கர்த்தராகிய நான் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் வைத்தேன்.

16 தேவனாகிய கர்த்தராகிய நான், மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்,

17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம், ஆயினும், நீயே அதைத் தெரிந்துகொள்ளலாம்; ஏனெனில் அது உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அதை நான் தள்ளிவைத்திருக்கிறேன் என்பதை நினைவுகூரு; ஏனெனில், அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டேன்.

18 பின்பு தேவனாகிய கர்த்தராகிய நான் என்னுடைய ஒரேபேறானவரிடம், மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றேன்.

19 தேவனாகிய கர்த்தராகிய நான் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகள் அவனிடத்தில் வரும்படியாக கட்டளையிட்டேன்; அவைகளும் ஜீவாத்துமாக்களே; ஏனெனில் தேவனாகிய நான் ஜீவசுவாசத்தை அவைகளின் நாசியிலே ஊதினேன், அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராகுமென நான் கட்டளையிட்டேன்.

20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டு மிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

21 அப்பொழுது, தேவனாகிய கர்த்தராகிய நான் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினேன்; அவன் நித்திரையடைந்தான், நான் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தேன்;

22 தேவனாகிய கர்த்தராகிய நான் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தேன்.

23 அப்பொழுது ஆதாம், இவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.