வேதங்கள்
யாக்கோபு 4


அதிகாரம் 4

எல்லா தீர்க்கதரிசிகளும், பிதாவை கிறிஸ்துவின் நாமத்திலே தொழுதார்கள் – ஈசாக்கை ஆபிரகாம் பலியாகக் கொடுத்தது, தேவனுக்கும் அவருடைய ஒரே பேறானவருக்கும் மாதிரியாயிருத்தல் – பாவநிவர்த்தியின் மூலம் மனுஷர் தங்களையே தேவனிடத்தில் ஒப்புரவாக்கவேண்டும் – யூதர்கள் அஸ்திபாரக்கல்லை புறக்கணிப்பர். ஏறக்குறைய கி.மு. 544–421.

1 இப்பொழுது இதோ, அந்தப்படியே, யாக்கோபாகிய நான், என் ஜனங்களுக்கு வார்த்தையைக்கொண்டு அதிகமாய் ஊழியம் செய்தேன். (தகடுகள்மீது எங்கள் வார்த்தைகளைப் பொறிப்பதிலுள்ள சிரமங்களினிமித்தம் என்னுடைய வார்த்தைகளில் சிலவற்றை நான் எழுதுகிறேன்.) நாங்கள் தகடுகள்மீது எழுதும் காரியங்கள் நிலைத்திருக்க வேண்டுமென அறிகிறோம்.

2 ஆனால் எந்தக் காரியமானாலும் தகடுகளைத் தவிர, வேறு எவற்றின் மீது நாங்கள் எழுதினாலும், அது அழிந்து மறைந்துபோம். ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் பிரியமான சகோதரர்களுக்கும், எங்களைக் குறித்த அல்லது அவர்களுடைய பிதாக்களைக் குறித்த செய்தியினை, சிறிதளவு கொடுக்கக்கூடிய, சில வார்த்தைகளை தகடுகள்மீது நாங்கள் எழுதமுடியும்.

3 இப்பொழுது இந்தக் காரியத்தில் நாங்கள் களிகூருகிறோம். எங்களுடைய பிரியமான சகோதரரும், எங்களுடைய பிள்ளைகளும், நன்றியுள்ள இருதயங்களுடன் அவைகளைப் பெற்றுக்கொண்டு, துக்கமில்லாமலும், வெறுப்பில்லாமலும், மகிழ்ச்சியுடனே, தங்களின் முதற்பெற்றோர்களைக் குறித்து அறியும்படியாய், அவைகளை நோக்குவார்கள், என நம்பியே தகடுகள்மீது இந்த வார்த்தைகளை பொறிக்க கருத்தாய்ப் பிரயாசப்படுகிறோம்.

4 ஏனெனில், கிறிஸ்துவை அறிந்திருந்தோம் என்றும், அவர் வருகைக்கு அநேக வருஷங்களுக்கு முன்னமே அவரின் மகிமையில் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றும், நாங்கள் மாத்திரம் அல்ல, எங்களுக்கு முன்னமே இருந்த எல்லா பரிசுத்த தீர்க்கதரிசிகளும் அவரின் மகிமையிலே நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்றும், அவர்கள் அறிவதற்காகவே இந்தக் காரியங்களை நாங்கள் எழுதியிருக்கிறோம்.

5 இதோ, கிறிஸ்துவிலே அவர்கள் விசுவாசித்து, பிதாவை அவருடைய நாமத்திலே தொழுதுகொண்டார்கள், நாங்களும் பிதாவை அவருடைய நாமத்தில் தொழுகிறோம். இந்த நோக்கத்துக்காகவே, எங்கள் ஆத்துமாக்களை அவரிடத்தில் வழிநடத்துகிற, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறோம். தேவனுக்கும் அவருடைய ஒரேபேறான குமாரனுக்கும் மாதிரியாக, தன் குமாரனாகிய ஈசாக்கை, வனாந்தரத்தில் ஆபிரகாம் தேவனுடைய கட்டளைக்கேற்ப, பலியாக தந்தது நீதியென்று எண்ணப்பட்டதுபோல, இக்காரணத்துக்காகவே நீதியென்று எங்களுக்கும் எண்ணப்பட்டது.

6 ஆகையால் தீர்க்கதரிசிகளை நாங்கள் ஆராய்ந்து பார்க்கிறோம். நாங்கள் அநேக வெளிப்படுத்தல்களையும், தீர்க்கதரிசன ஆவியையும் பெற்றிருக்கிறோம். இந்த எல்லா சாட்சிகளையும், பெற்றிருப்பதால், நாங்கள் நம்பிக்கையைப் பெறுகிறோம். நாங்கள் மெய்யாகவே இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட்டால் மலைகளும், சமுத்திரத்தின் அலைகளும், மரங்களும் எங்களுக்கு கீழ்ப்படியுமளவிற்கு எங்களின் விசுவாசம் அசைக்கப்பட முடியாததாயிருக்கிறது.

7 ஆயினும், அவருடைய கிருபையினாலும், மனுபுத்திரரிடத்தில் அவர் பலமுறை சித்தமிரங்கினதினாலும், இந்தக் காரியங்களைச் செய்ய நமக்கு வல்லமையிருக்கிறதென்று, நாம் அறியும்படிக்கு நம்முடைய பெலவீனங்களை, கர்த்தராகிய தேவன் நமக்குக் காண்பிக்கிறார்.

8 இதோ, கர்த்தருடைய கிரியைகள் பெரிதும், மகத்துவமுமானவை. அவருடைய இரகசியங்களின் ஆழங்கள் எவ்வளவு அறியக்கூடாததாயிருக்கிறது, அவரின் வழிகள் அனைத்தையும் மனுஷன் அறிவது கூடாத காரியமாயிருக்கிறது. அவைகள் வெளிப்படுத்தப்பட்டாலொழிய ஒருவனும் அவருடைய வழிகளை அறியான். ஆகவே சகோதரரே, தேவனுடைய வெளிப்படுத்தல்களை இகழாதிருங்கள்.

9 இதோ, பூமியின் பரப்பின் மீது, மனுஷன் அவரின் வார்த்தையின் வல்லமையினால் உண்டாக்கப்பட்டான். இந்தப் பூமி அவரின் வார்த்தையின் வல்லமையினால் சிருஷ்டிக்கப்பட்டது. ஆதலால் தேவன் பேசினால், உலகம் உண்டானதேயென்றால், அவர் பேசி மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டானென்றால், ஏன் அவர் தன் சித்தத்திற்கும், விருப்பதிற்கும் ஏற்ப, அதின் மீது உள்ள தன் கைகளின் வேலைப்பாடுகளையோ, பூமியையோ கட்டளையிடக்கூடாமற்போகிறது?

10 ஆதலால் சகோதரரே, கர்த்தருக்கு ஆலோசனைகூற நாடாமல், அவரின் கரத்திலிருந்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தேடுங்கள். ஏனெனில் இதோ, தம் எல்லா கிரியைகளைப்பற்றியும், அவர் ஞானத்திலும், நீதியிலும் மகா இரக்கத்தோடு ஆலோசனை கொடுக்கிறார், என்பதை நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.

11 ஆதலால், பிரியமான சகோதரரே, அவரின் ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் அவரில் ஒப்புரவாகுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலே இருக்கிற உயிர்த்தெழுதலின் வல்லமையின்படியே உயிர்த்தெழுதலைப் பெறலாம். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருப்பதால், மாம்சத்திலே தன்னையே அவர் வெளிப்படுத்துவதற்கு முன்னமே அவரில் இருக்கிற மகிமையின் நன்மையான நம்பிக்கையைப் பெற்று, தேவனுக்குக் கிறிஸ்துவின் முதற் கனிகளாக அர்ப்பணிக்கப்படுவீர்களாக.

12 இப்பொழுது, அன்பானவர்களே, இந்தக் காரியங்களை உங்களுக்குச் சொல்லுகிறேனே என வியக்காதீர்கள்; ஏனெனில் வரவிருக்கிற உலகம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு, அவரைப்பற்றிய சம்பூரண அறிவைப்பெற, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைக் குறித்து நாம் ஏன் பிரசங்கிக்கக் கூடாது?

13 இதோ, என் சகோதரரே, தீர்க்கதரிசனம் உரைப்பவன், மனுஷர் புரிந்துகொள்ளும்படியே தீர்க்கதரிசனம் உரைப்பானாக. ஏனெனில் ஆவியானவர் பொய்யுரைக்காமல் உண்மையையே பேசுகிறார். ஆதலால் உண்மையாகவே இருக்கிறதும், உண்மையாகவே இருக்கப்போகிறதுமான காரியங்களைக் குறித்துச் சொல்கிறார். அதினிமித்தம், எங்கள் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக, தெளிவாக இந்தக் காரியங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன; ஆனாலும் இதோ, பூர்வகாலத்து தீர்க்கதரிசிகளிடத்திலும் தேவன் பேசியிருப்பதால், இந்தக் காரியங்களுக்கு நாங்கள் மாத்திரம் சாட்சிகளல்ல.

14 ஆனால் இதோ, யூதர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனமாக இருந்தார்கள். அவர்கள் தெளிவான வார்த்தைகளை அசட்டைபண்ணி, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, தாங்கள் புரிந்துகொள்ளமுடியாத காரியங்களையே நாடினார்கள். ஆகையால் அவர்களின் குருட்டுத் தன்மையின் நிமித்தம், அந்தக் குருட்டுத்தன்மை இலக்கைத் தாண்டி பார்த்ததினிமித்தம் வந்ததாலும், அவர்களின் வீழ்ச்சி அவசியமானதாயிருக்கிறது. ஆதலால் அவர்களிடத்திலிருந்து தன்னுடைய தெளிவானவைகளைத் தேவன் எடுத்துவிட்டு, அவர்கள் விரும்பினபடியே, அவர்கள் புரிந்துகொள்ளமுடியாத அநேகக் காரியங்களை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் விரும்பினதினிமித்தம், கர்த்தர் அப்படிச் செய்து, அவர்களை இடறப்பண்ணினார்.

15 இப்பொழுது யாக்கோபாகிய நான், தீர்க்கதரிசனமுரைப்பதற்கு ஆவியால் வழிநடத்தப்பட்டு, யூதர்களின் இடறுதலினிமித்தம், அவர்கள் எந்தக் கல்லின் மீது கட்டி பாதுகாப்பான அஸ்திபாரம் அமைக்க முடியுமோ, அதையே அவர்கள் புறக்கணிப்பார்கள் என எனக்குள்ளிருக்கும் ஆவியின் கிரியையினாலே உணருகிறேன்.

16 ஆனால், இதோ, வேதவாக்கியங்களின்படி, யூதர்கள் அதன் மீது கட்டக்கூடிய, இந்தக் கல், பெரிதும் இறுதியுமான, ஒரே உறுதியான அஸ்திபாரமாகும்.

17 இப்போது, எனக்கன்பானவர்களே, அவர்கள் உறுதியான அஸ்திபாரத்தைப் புறக்கணித்த பின்பு, அவர்களின் மூலைக்குத் தலைக்கல்லாகும்படிக்கு, அதன்மீது கட்டுவது, எப்படி சாத்தியமாகும்?

18 இதோ, என் அன்புச் சகோதரரே, எந்த விதத்திலாவது, ஆவியிலே இருக்கும் என் உறுதியிலிருந்து நான் நடுக்கங்கொள்ளாமலும், உங்களின் மீது நான் சஞ்சலப்பட்டு தடுமாறாமலும் இருந்தேனேயாகில், இந்த இரகசியத்தை உங்களுக்கு நான் வெளியாக்குவேன்.