வேதங்கள்
ஏலமன் 15


அதிகாரம் 15

கர்த்தர் நேபியரை நேசித்ததால், அவர்களை அவர் தண்டித்தார் – மனம் மாறிய லாமானியர் விசுவாசத்தில் உறுதியாயும், திடனாயும் இருத்தல் – பிற்காலங்களில் கர்த்தர் லாமானியருக்கு இரக்கமுள்ளவராய் இருப்பார். ஏறக்குறைய கி,மு. 6.

1 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, இதோ, நீங்கள் மனந்திரும்பாவிடில், உங்கள் வீடுகள் பாழாக்கப்படும் என்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

2 ஆம், நீங்கள் மனந்திரும்பாவிடில், உங்கள் ஸ்திரீகள் பால் கொடுக்கும் அந்த நாளிலே மிகவும் துக்கப்படவேண்டியதாயிருக்கும்; ஏனெனில் நீங்கள் ஓடிப்போக முயற்சிப்பீர்கள். அடைக்கலமான ஓர் இடமும் அங்கே இராது; ஆம், பிள்ளையோடு இருப்பவர்களுக்கு ஐயோ. கனமாயிருப்பதாலே அவர்களால் ஓடமுடியாது; அதனால் அவர்கள் மிதிக்கப்பட்டு, மடிந்து போகும்படியாய் விடப்படுவார்கள்.

3 ஆம், நேபியின் ஜனங்களென்று அழைக்கப்படுகின்ற இந்த ஜனங்களுக்கு காண்பிக்கப்படும் இந்த எல்லா அறிகுறிகளையும், அற்புதங்களையும் இவர்கள் கண்டு மனந்திரும்பாவிடில், அவர்களுக்கு ஐயோ; ஏனெனில் இதோ, அவர்கள் கர்த்தருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாய் இருக்கிறார்கள்; ஆம், அவர் நேபியின் ஜனத்தை நேசித்து, அவர்களைத் தண்டித்தும் இருக்கிறார்; ஆம், அவர் அவர்களை நேசிப்பதால், அவர்களுடைய அக்கிரம நாட்களில், அவர் அவர்களைத் தண்டித்திருக்கிறார்.

4 இதோ, என் சகோதரரே, லாமானியரின் கிரியைகள் தொடர்ந்து பொல்லாப்பாயிருந்ததினிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். இது அவர்களுடைய பிதாக்களின் அக்கிரமமான பாரம்பரியத்தினிமித்தமே. ஆனால் இதோ, இரட்சிப்பு அவர்களுக்கு நேபியர்களின் போதகத்தின் மூலமாய் வந்திருக்கிறது; இந்நோக்கத்திற்காக கர்த்தர் அவர்களுடைய நாட்களை நீடித்திருக்கிறார்.

5 அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கடமையின் பாதையில் இருப்பதையும், தேவனுக்கு முன்பாக பயபக்தியோடு நடப்பதையும், அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, அவருடைய கட்டளைகளையும், அவருடைய ஒழுங்குகளையும், அவருடைய நியாயத்தீர்ப்புகளையும், கைக்கொண்டு ஆசரிக்கிறதையும் நீங்கள் காணவேண்டுமென விரும்புகிறேன்.

6 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இதைச் செய்து, தங்கள் சகோதரரில் மீதியானவர்களையும் சத்தியத்தின் ஞானத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு சலிப்பில்லாமல் கருத்தோடு முயற்சிக்கிறார்கள்; ஆதலால் அவர்கள் எண்ணிக்கை அனுதினமும் பெருகிக்கொண்டே வருகிறது.

7 இதோ, சத்திய ஞானத்திற்குக் கொண்டுவரப்பட்ட அநேகர் தங்களுடைய பிதாக்களின் துன்மார்க்க அருவருப்பான பாரம்பரியங்களை அறிகிறதையும், கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கவும் மனந்திரும்புதலுக்குள்ளாக அவர்களை நடத்துகிற பரிசுத்த வேத வாக்கியங்களையும், ஆம், எழுதப்பட்ட பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களையும் விசுவாசிக்க வழிநடத்தப்படுகிறதையும், இதோ, நீங்கள் கண்டும் அறிந்தும் இருக்கிறீர்கள். இந்த விசுவாசமும், மனந்திரும்புதலும் இருதய மாற்றத்தை அவர்களுக்குக் கொண்டுவருகிறது.

8 ஆகவே, இப்படி வந்த அநேகரும் விசுவாசத்திலும் தங்களை விடுதலை பண்ணின காரியத்திலும் உறுதியாயும், அசைக்க முடியாதவர்களாயும் இருக்கிறார்கள் என்று நீங்களே அறிகிறீர்கள்.

9 அவர்கள் தங்களின் யுத்தக் கருவிகளை புதைத்து வைத்தார்களென்றும், அவற்றை எடுத்தால், தாங்கள் பாவம் செய்துவிடுவோமோ, என்று பயந்திருக்கிறார்களென்றும் நீங்கள் அறிவீர்கள்; ஆம், அவர்கள் பாவம் செய்யப் பயப்படுகிறதையும் நீங்கள் காணலாம். ஏனெனில் இதோ, அவர்கள் தங்கள் விரோதிகளால் தாங்கள் மிதிபடவும் கொல்லப்படவும் அனுமதிப்பார்கள், தங்கள் பட்டயத்தை அவர்களுக்கு விரோதமாக எடுக்க மாட்டார்கள். இது கிறிஸ்துவில் அவர்கள் வைத்திருக்கிற விசுவாசத்தினிமித்தமே.

10 இப்பொழுதும் அவர்கள் தாங்கள் நம்பவேண்டிய காரியத்தை நம்பிய, உறுதியினிமித்தமும், தாங்கள் ஒருமுறை ஞானத்தைப் பெற்றபோது அதனால் உண்டான உறுதியினிமித்தமும், இதோ, கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய நாட்களை நீடிக்கப்பண்ணுவார்.

11 ஆம், நம்முடைய சகோதரரான லாமானியர் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து போனாலும், அவர்களை சத்திய ஞானத்திற்கு மறுபடியும் கொண்டுவருதலைக் குறித்து நம்முடைய பிதாக்களாலும், தீர்க்கதரிசி சீனஸ் மற்றும் மற்ற அநேக தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட காலம் வரும்வரைக்கும், கர்த்தர் அவர்களின் நாட்களை நீடிக்கப்பண்ணுவார்.

12 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிற்காலங்களில் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய சகோதரராகிய லாமானியருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அநேக உபத்திரவங்களைப் பெறவிருப்பினும், பூமியின் பரப்பின் மேல் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டு, வேட்டையாடப்பட்டு, அடிக்கப்பட்டு, தூரமாய் சிதறடிக்கப்பட்டு, அடைக்கலத்திற்கு இடமில்லாதிருப்பினும், கர்த்தர் அவர்களுக்கு இரக்கமுள்ளவராயிருப்பார்.

13 இது அவர்கள் தங்கள் மீட்பரும் தங்களின் மகத்துவமுள்ள மெய்யான மேய்ப்பருமானவரைக் குறித்த ஞானமான சத்திய ஞானத்திற்கு மறுபடியும் கொண்டுவரப்படுவார்களென்றும், அவருடைய ஆடுகளுக்குள் எண்ணப்படுவார்களென்றதுமான தீர்க்கதரிசனத்தின்படியே ஆகும்.

14 ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாவிடில் உங்களிலும் அவர்களுக்கே நலமாயிருக்கும்.

15 ஏனெனில் இதோ, உங்களுக்குக் காண்பிக்கப்பட்ட அந்த பலத்த கிரியைகள், தங்கள் பிதாக்களின் பாரம்பரியங்களினிமித்தம், அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்துபோன அவர்களிடத்தில் காண்பிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மறுபடியும் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து போயிருக்கமாட்டார்கள், என்று நீங்களே காணலாம்.

16 ஆதலால் கர்த்தர் சொல்லுகிறதாவது: நான் அவர்களை முழுவதுமாய் அழிக்கமாட்டேன். ஆனால் என்னுடைய ஞானத்தின் நாளிலே அவர்கள் மறுபடியும் என்னிடத்தில் திரும்பிவரப் பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

17 இப்பொழுதும் இதோ, நேபியர்களைக் குறித்து கர்த்தர் சொல்லுகிறதாவது: அவர்கள் மனந்திரும்பவில்லையானாலும், என் சித்தத்தைச் செய்யவில்லையானாலும் நான் அவர்களை முழுவதுமாய் அழித்துப்போடுவேன். அவர்களுக்கு மத்தியிலே அநேக பலத்த கிரியைகளைச் செய்திருப்பினும், அவர்களின் அவிசுவாசத்தினிமித்தமே என்று கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தர் ஜீவிக்கிறபடியாலே இவைகள் சம்பவிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.